புது டெல்லி: நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கும் சுங்க வரிச் சாவடிகள் மூலம் ‘FASTag’ சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் 2025-26 முதல் 3 மாதங்களில் (ஏப்ரல், மே, ஜூன்) மட்டும் FASTag சுங்க வரி மூலம் மத்திய அரசு ரூ. 20,682 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 19.6% அதிகம் என்று தேசிய மின்னணு சுங்க வரி வசூல் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மட்டும் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை 16.2% அதிகரித்து, சுமார் ரூ.117.6 கோடி கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளது. இதற்கிடையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏப்ரல் 1 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணத்தை 4 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த சூழலில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு பேட்டியில், ‘வாகன ஓட்டுநர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய வருடாந்திர FASTag திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த புதிய திட்டம் ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இதன்படி, ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தி 200 பயணங்கள் வரை மேற்கொள்ளலாம். அதாவது, ஒரு பயணத்திற்கு ரூ.15 மட்டுமே செலவாகும். இந்த வருடாந்திர திட்டத்தைத் தேர்வு செய்ய விரும்பாதவர்களுக்கு, அவர்கள் பயணித்த தூரத்திற்கு மட்டுமே பணம் செலுத்தும் மற்றொரு திட்டம் உள்ளது.
அதன்படி, 100 கிலோமீட்டர் பயணம் செய்ய ரூ.50 மட்டுமே செலுத்த வேண்டும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வருடாந்திர திட்டம் தற்போதுள்ள FASTag உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும். எதிர்காலத்தில், சுங்கச்சாவடிகளுக்குப் பதிலாக ஜிபிஎஸ் மற்றும் தானியங்கி வாகன கண்காணிப்பு தொழில்நுட்பம் மூலம் சுங்கச்சாவடிகள் வசூலிக்கப்படும் என்று அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
மத்திய அரசு முன்னதாக 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 மதிப்புள்ள ‘வாழ்நாள் ஃபாஸ்டேக்’ திட்டத்தை அறிவித்திருந்தாலும், அந்தத் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.