புதுடில்லி: பாஸ்டேக்கில் வந்துள்ள புதிய விதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்த ‘பாஸ்டேக்’ முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதன்படி, வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் நெடுஞ்சாலை பயணங்களை எளிதாக்க பாஸ்டேக் விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருடாந்திர பாஸ் முறை: வருடத்திற்கு ரூ.3000 செலுத்தி அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் மற்றும் மாநில விரைவுச் சாலைகளில் ஆண்டு முழுவதும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம். இந்த “வருடாந்திர பாஸ்” முறையில் இந்தியா முழுவதும் பயணிக்க FASTag ரீசார்ஜ்கள் தேவையில்லை.
பயணிக்கும் தூர அடிப்படையிலான விலை நிர்ணயம்: 100 கி.மீ.க்கு 50 ரூபாய் என்ற நிலையான கட்டணம் வசூலிக்கப்படும். இது அடிக்கடி பயணம் செய்யாதவர்களுக்கு ஏற்றது.
வாழ்நாள் பாஸ்டேக் திட்டம் நீக்கம்: 30,000 ரூபாய் கட்டணம் செலுத்தி 15 ஆண்டுகளுக்கு பயணிக்கும் வாழ்நாள் பாஸ்டேக் திட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.