புது டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதே அரசின் முதன்மை இலக்கு என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:-
மத்திய அரசைப் பொறுத்தவரை, நிலையான பொருளாதார வளர்ச்சியையும் அதற்குத் தேவையான ஆதரவையும் அதன் முதன்மை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் மூலதனச் செலவினங்களை அதிகரிக்க நிதி அமைச்சகத்திற்கு தனிப்பட்ட முறையில் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

அதனால்தான் பொது முதலீட்டிற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனக்குத் தெரிந்த தரவுகளின் அடிப்படையில், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு முதலீடுதான் முதன்மை அடிப்படை.
அந்த வகையில், இந்தியாவின் நட்புரீதியான அந்நிய நேரடி முதலீட்டு (FDI) கொள்கை இந்தியா அதிக முதலீட்டைப் பெறுவதற்கு மிக முக்கியமான காரணமாகும். தற்போது, மாநிலங்களும் முதலீடுகளை ஈர்ப்பதில் சிறப்பாக செயல்படுகின்றன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.