டெல்லி: பீகார் சிறப்புத் தேர்தல் திருத்தச் சட்டத்தில் 62 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லாவின் இருக்கையை எதிர்க்கட்சிகள் சூழ்ந்துகொண்டு கோஷங்களை எழுப்பின.
இன்று காலை 11 மணிக்கு அதிமுகவின் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை திமுகவின் பி. வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் எம்.பி.க்களாக பதவியேற்றனர்.

தம்பிதுரை, சி.வி. சண்முகம் மற்றும் தர்மர் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர்களாக இருப்பதால், மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 4-லிருந்து 5 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகள் தொடங்கியது. இன்று நாடாளுமன்ற அவைகளில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதங்கள் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், பீகார் சிறப்புத் தேர்தல் திருத்தச் சட்டத்தில் 62 லட்சம் வாக்காளர்கள் விலக்கப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
பிரதமர் மோடி மக்களவைக்கு வருகை தந்திருந்தபோது, மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லாவின் இருக்கையை எதிர்க்கட்சிகள் சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பின. இதனால், அவை முடங்கியது. இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.