துபாய்: ரம்ஜான் நோன்பு விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு முஸ்லிம் மதகுரு மவுலானா ஷகாபுதின் ரஷ்வி பரேல்வி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது. கடந்த 4ஆம் தேதி நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமியின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது. அவர் 10 ஓவர்களில் 48 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது, அவர் தண்ணீர் குடித்ததற்கு முஸ்லிம் மதகுரு மவுலானா ஷகாபுதின் ரஷ்வி பரேல்வி கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “நோன்பு இருப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. யாரெல்லாம் நோன்பை கடைபிடிக்க தவறுகிறார்களோ, அவர்கள் எல்லாம் பாவிகள். இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி நோன்பை கடைபிடிக்கவில்லை. இது குற்ற செயலாகும்” என அவர் கூறினார்.
மேலும், அவர் “நோன்பை மீறியதன் மூலம், மத கொள்கையை மீறியதுடன், பாவத்தை செய்துள்ளார்” என்றார். அவர் மேலும், “அவர் ஒரு விளையாட்டு வீரராக இருக்கிறார் என்றால், அவர் ஆரோக்கியமானவராக இருக்கிறார் என்று தான் அர்த்தம். அப்படியிருக்கும் போது அவர் நோன்பை கடைபிடித்திருக்க வேண்டும்” என்றும் கூறினார்.
இந்த கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்தக் கருத்துக்கு எதிராக, அகில இந்திய முஸ்லீம் தனி சட்டவாரியத்தின் உறுப்பினர் மவுலானா கலித் ரஷித் பராங்கி மஹாலி, ஷமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். “ஷமி ஒரு கிரிக்கெட் தொடருக்கான சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். இது போன்று பயணிப்பவர்களுக்கும், உடல்நிலை சரியில்லாதவர்களுக்கும் சலுகைகள் உள்ளன. அவரிடம் யாரும் கேள்வி எழுப்ப முடியாது,” என அவர் கூறினார்.
மேலும், ஷமியின் உறவினர் மும்தாஜ் கூறுகையில், “இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல், சாம்பியன்ஸ் டிராபி பைனலில் கவனம் செலுத்துமாறு எங்களின் குடும்பத்தினர் ஷமியிடம் கூறியுள்ளனர். இதுபோன்ற விஷயங்கள் வெட்கக்கேடானது,” எனக் கூறினார்.