விஜயவாடா: திருப்பதி லட்டு பிரசாதத்திற்காக கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் வாங்கிய கலப்பட நெய்யில் கால்நடை கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்பதி லட்டு பிரசாத்தில் விலங்குகளின் கொழுப்பு சேர்ப்பது குறித்து கேள்விப்பட்டு மிகவும் கவலையடைந்துள்ளோம். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்,” என்றார்.
இதை டேக் செய்து நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புள்ள பவன் கல்யாண், நீங்கள் துணை முதல்வராக இருக்கும் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதில் ஏன் தேவையில்லாத பயத்தை பரப்புகிறீர்கள்?. நாட்டில் ஏற்கனவே போதுமான வகுப்புவாத பதற்றம் உள்ளது. (மத்தியில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு நன்றி)’ என்று ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில், பவன் கல்யாண் நேற்று காலை விஜயவாடா கனகதுர்க்கையம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்வதை சிலர் கேலியாகவும், கிண்டலாகவும் பார்க்கின்றனர்.
சனாதன தர்மத்தைப் பற்றி ஏளனமாகவும் கிண்டலாகவும் பேசினால் சும்மா இருக்க முடியாது. என் வீட்டுக்குள் கல் எரிந்தால் எப்படி பார்க்க முடியாதோ அதே போலத்தான் இதுவும். நடிகர் பிரகாஷ்ராஜும் இந்த விவகாரத்தை தெரிந்து கொண்டு இதுபோன்ற செண்டிமெண்ட் பிரச்னையை பேச வேண்டும்.
இந்த விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் பேசினால் பார்த்துக் கொள்ள முடியாது என எச்சரித்தார். பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “நான் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டது ஆச்சரியமாக உள்ளது. வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன்.
உங்கள் கேள்விக்கு நான் திரும்பி வந்ததும் பதில் சொல்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 4 நாட்களில் 14 லட்சம் லட்டு விற்பனை: எத்தனை பிரச்னைகள் இருந்தாலும், ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்கள் தயங்காமல் லட்டுகளை வாங்கிச் சென்றனர்.
கடந்த 19-ம் தேதி 3.59 லட்சம், 20-ம் தேதி 3.17 லட்சம், 21-ம் தேதி 3.67 லட்சம், 22-ம் தேதி 3.60 லட்சம் என மொத்தம் 13.99 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன.