
ஆமதாபாத் விமான நிலையத்தில் நடந்த விமான விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏர் இந்தியா விமானம் 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கியதில், விமானியின் அவசர அழைப்பு செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
விபத்துக்கு சில வினாடிகளுக்கு முன், விமான கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொண்டு, விமானி ஒரு முக்கிய எச்சரிக்கை தகவலை வழங்கியிருந்தார். அதில் அவர், “மே டே… மே டே… மே டே… நோ பவர்… நோ திரஸ்ட்… கோயிங் டவுண்…” என கூறியுள்ளார். இந்த செய்தி, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மிக தீவிரமென்பதை வெளிக்காட்டுகிறது.
விமானத் துறையிலும், கடல் பயணத்திலும் “மே டே” என்பது, ஆபத்தில் இருப்பதை தெரிவிக்கும் ஓர் எச்சரிக்கைச் சொல். அதனை மூன்று முறை கூறியதும், பின்னர் திடீர் சக்தி இழப்பு, இயந்திர இயக்கக் கோளாறு போன்றவை இருப்பதாக விமானி தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த உரையாடல் மூலம், விமானம் கீழே விழும் அபாயம் ஏற்பட்டதை விமானி உணர்ந்ததையும், துரிதமாக தகவல் அனுப்பி உதவி கோரியதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. தற்போது சம்பவத்தின் முழு விபரமும், காரணங்களும் அடிக்கடி பரிசோதிக்கப்படுகின்றன.