இஸ்லாம் மதத்தின் புனித மாதமான ரம்ஜான் தற்போது கொண்டாடப்படுகிறது, மேலும் வரும் 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் அக்கிரமமாக, உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னதாக, சாலைகளில் தொழுகை நடத்துபவர்களுக்கு எதிராக காவல் துறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கைகளை மீறுபவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என மீரட் எஸ்.பி. ஆயுஷ் விக்ரம் சிங் அறிவித்துள்ளார். அவர், “தொழுகைகளை உள்ளூர் மசூதிகளில் நடத்த வேண்டும். யாரும் சாலைகளில் தொழுகை நடத்தக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
மீரட் மாவட்ட மற்றும் காவல் நிலையங்களில் கூட்டங்களைக் கூட்டி, அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டதன் அடிப்படையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக, மீரட் மூத்த காவல் கண்காணிப்பாளர் விபின் தடா தெரிவித்துள்ளார். “பொதுவாக, கடந்த கால அனுபவங்களை வைத்து, பதற்றமிக்க பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமைதியைப் பேணுவதற்கும், பண்டிகைகளை சீராகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கும், நிர்வாகம் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.
மேலும், சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் அல்லது அமைதியின்மையை தூண்டுபவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய லோக் தளம் தலைவருமான ஜெயந்த் சிங் சவுத்ரி, “தனிநபர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், அவர்களின் பாஸ்போர்ட்டுகள் மற்றும் உரிமங்கள் ரத்து செய்யப்படும். நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை பெறுவது கடினமாகிவிடும்” என தெரிவித்தார்.