டெல்லி: வக்ஃப் சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான குழு நீண்ட ஆய்வுக்குப் பிறகு தனது பரிந்துரையை வழங்கியது. இதன் அடிப்படையில் கடந்த 2-ம் தேதி மக்களவையில் வக்ஃப் திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. தாங்கள் கோரிய திருத்தங்கள் சேர்க்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
எனினும், சுமார் 13 மணிநேரம் நீடித்த விவாதத்துக்குப் பிறகு, நள்ளிரவில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, கடந்த 3-ம் தேதி ராஜ்யசபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 17 மணி நேரம் நீடித்த விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த மசோதா மீதான வாக்கெடுப்பின் போது, மக்களவையில் 288 உறுப்பினர்களும், எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அதேபோல், ராஜ்யசபாவில் ஆதரவாக 128 உறுப்பினர்களும் எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “வக்ஃப் மசோதா நிறைவேறியது திருப்புமுனை தருணம்.

வக்ஃப் அமைப்பின் செயல்பாடு நீண்ட காலமாக வெளிப்படைத்தன்மை இல்லாமல் உள்ளது. இந்நிலையில் வக்ஃப் திருத்த மசோதா வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும்” என பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். பின்னர், அது சட்டமாக மாறியது. இது அதிகாரப்பூர்வ அரசிதழிலும் வெளியிடப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது.
வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தை சீர்திருத்துவது, பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது மற்றும் வக்ஃப் வாரியங்களில் பல்வேறு முஸ்லீம் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதை இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இச்சட்டத்தின் நோக்கம் பாரம்பரிய இடங்களைப் பாதுகாப்பதும், சமூக நலனை மேம்படுத்துவதும், முஸ்லீம் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்கள் உட்பட ஒதுக்கப்பட்ட பிரிவினரின் சமூக மற்றும் பொருளாதார நலனை மேம்படுத்துவதும் ஆகும். 1923-ம் ஆண்டு முஸ்லீம் வக்ஃப் சட்டத்தை ரத்து செய்யும் முஸ்லிம் வக்ஃப் (ரத்து) மசோதாவுக்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதியும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். காலாவதியான விதிகளை ரத்து செய்வதே இதன் நோக்கம்.