கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான கார்கில் போரில் இந்தியா பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி நாள் கொண்டாடப்படுகிறது.
1999-ம் ஆண்டு, யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஜம்மு-காஷ்மீரின் கார்கில் பகுதிக்குள் பயங்கரவாதிகளைப் போல பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்தது. சில பகுதிகளையும் கைப்பற்றியது. அந்த நேரத்தில், இந்தியா ‘ஆபரேஷன் விஜய்’யை தொடங்கியது. மலைகள் மற்றும் காடுகளுக்குள் நுழைந்த இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதல்களால் பாகிஸ்தான் ராணுவம் அதிர்ச்சியில் தப்பி ஓடியது.

இதில், இந்திய ராணுவம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய ராணுவம் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினர். இது தொடர்பாக, ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது X வலைத்தளத்தில் கூறியதாவது:- கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு, தாய்நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலிகளை செலுத்துகிறேன்.
இந்த நாள் நமது வீரர்களின் அசாதாரண வீரம், துணிச்சல் மற்றும் உறுதிப்பாட்டின் அடையாளமாகும். நாட்டிற்காக அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உயர்ந்த தியாகம் எப்போதும் நாட்டு மக்களை ஊக்குவிக்கும். ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்! அதில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது X வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது:-
கார்கில் வெற்றி தினமான இன்று நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள். நாட்டின் சுயமரியாதையைப் பாதுகாக்க தங்கள் உயிரை அர்ப்பணித்த இந்தியத் தாயின் துணிச்சலான மகன்களின் இணையற்ற துணிச்சலையும் வீரத்தையும் இந்த சந்தர்ப்பம் நமக்கு நினைவூட்டுகிறது. தாய்நாட்டிற்காக இறக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பம் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். ஜெய் ஹிந்த்! அதில் கூறப்பட்டுள்ளது.