புது டெல்லி: மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள அதிகாரிகள், பிரதமர் மோடி 13-ம் தேதி மிசோரம் மற்றும் மணிப்பூருக்கு வருகை தர வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, புதிதாக கட்டப்பட்ட பைரபி-சாய்ராங் ரயில் பாதையைத் திறந்து வைக்க பிரதமர் மோடி முதலில் மிசோரம் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.
மே 2023-ல், மணிப்பூரில் இரண்டு இனக்குழுக்களுக்கு இடையேயான வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வன்முறை காரணமாக 60,000 பேர் இடம்பெயர்ந்ததாகக் கூறப்படுகிறது. வன்முறை வெடித்த பிறகு, மக்களை ஆறுதல்படுத்த பிரதமர் மோடி இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட மணிப்பூருக்குச் செல்லவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், பிரதமர் மணிப்பூருக்கு முதல் முறையாக வருகை தருவார் என்று மிசோரம் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பிரதமரின் வருகைக்கான இறுதி பயணத் திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் உள்ள அதிகாரிகளாலும் பிரதமரின் வருகையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், மிசோரம் தலைமைச் செயலாளர் கில்லி ராம் மீனா நேற்று முன்தினம் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் பிரதமரின் வருகைக்கான தயார்நிலையை மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இதில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.