வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 44 வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். வாரணாசி மண்டல கமிஷனர் கவுஷல் ராஜ் சர்மா கூறியதாவது:- வாரணாசியில் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்படும். பிந்ரா பகுதியில் 130 குடிநீர் திட்டங்கள், 100 புதிய அங்கன்வாடி மையங்கள், 356 நூலகங்கள், பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு கல்லூரி ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
ராம் நகர் பகுதியில் போலீஸ் தங்கும் விடுதி மற்றும் நான்கு கிராம சாலைகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ரயில்வே மற்றும் வாரணாசி மேம்பாட்டு ஆணையத்தால் சாஸ்திரி பதித்துரை மற்றும் சாம்னே படித்துறையில் அழகுபடுத்தும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பிரதமர் அடிக்கல் நாட்டும் 44 திட்டங்களில் 25 ரூ. 2,250 கோடி மதிப்பிலானவை. வாரணாசியின் மின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் பெரும்பாலான திட்டங்கள் தொடங்கப்படுகின்றன.

15 புதிய துணை மின் நிலையங்கள், புதிய மின்மாற்றிகள், 1,500 கி.மீ., புதிய மின்பாதைகள் அமைக்கப்பட உள்ளன. சௌகாபாடு பகுதியில் 220 கிலோவாட் துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். வாரணாசியில் விமான நிலையம் தொடர்பான உள்கட்டமைப்பு திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்காக சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
வாரணாசியில் 3 மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம் மற்றும் பள்ளி சீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். வாரணாசியில் உள்ள ரோஹானியா மெகந்திகன்ச் என்ற இடத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பேசுகிறார். இதற்காக வாரணாசியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.