அராரியா (பீகார்): பீகாரில் எஸ்.ஐ.ஆர் மூலம் ஏழை மக்களின் வாக்குகளை திருட பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பீகாரில் மேற்கொள்ளப்பட உள்ள எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக மாநிலத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வரும் ராகுல் காந்தி, அராரியா நகரில் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவுடன் ஊடகங்களைச் சந்தித்தார்.
அப்போது, ராகுல் காந்தி, “விழிப்புணர்வு பிரச்சாரம் மிகவும் வெற்றிகரமாக உள்ளது. மக்கள் இயல்பாகவே இதில் இணைகிறார்கள். வாக்கு மோசடி தொடர்பாக நாங்கள் முன்வைக்கும் கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். சரியான வாக்காளர் பட்டியலை வழங்குவது தேர்தல் ஆணையத்தின் வேலை. ஆனால், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகாவில் தேர்தல் ஆணையம் அதைச் செய்யத் தவறிவிட்டது. அதன் அணுகுமுறையை மாற்ற தேர்தல் ஆணையத்தின் மீது அனைத்து அழுத்தங்களையும் செலுத்தி வருகிறோம்.

இதை நாங்கள் நிறுத்த மாட்டோம். பீகாரில், வாக்காளர் பட்டியலில் உயிருடன் இருப்பவர்கள் கூட இறந்ததாக அறிவிக்கப்படுகிறார்கள். அத்தகைய பெயர்களை நாங்கள் காண்கிறோம். இப்போது குழந்தைகள் கூட வாக்கு மோசடி நடப்பதாகக் கூறுகிறார்கள். தேர்தல் ஆணையம் குழந்தைகளிடம் பேச வேண்டும். பீகாரில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு தீவிர திருத்தம் (SRI) மூலம் ஏழைகளின் வாக்குகளைத் திருட விரும்புகிறார்.
தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. சிறப்பு தீவிர திருத்தம் என்பது தேர்தல் ஆணையத்தின் முறையாக வாக்குகளைத் திருடுவதற்கான முயற்சியாகும். அரசியலமைப்பிற்கு எதிரான சிறப்பு தீவிர திருத்தம் மூலம் பீகாரில் வாக்குகள் திருடப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பீகாரில், இந்திய கூட்டணியின் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. தேர்தல் முடிவு சாதகமாக இருக்கும்.” என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, சிராக் பாஸ்வான் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், “நாங்கள் பிரச்சினைகளை எழுப்புகிறோம்.
அது குறித்து விவாதங்களை விரும்புகிறோம். சிராக் பாஸ்வான் ஒரு பிரச்சினை அல்ல. பொதுமக்களும் அவரைப் பற்றிப் பேசுவதில்லை. அவரை என் மூத்த சகோதரராகக் கருதி நான் அவருக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றார். அருகில் இருந்த ராகுல் காந்தி, இது எனக்கும் பொருந்தும் என்று நகைச்சுவையாகக் கூறினார்.