லக்னோ: சாவர்க்கர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் ஆஜராகாத காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது லக்னோ கோர்ட் ரூ.200 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிரா அகோலா மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வக்கீல் நிருபேந்திர பாண்டே ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு லக்னோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த வழக்கு விசாரணையில், மார்ச் 5 ஆம் தேதி ராகுலை நேரில் ஆஜராகுமாறு தலைமை நீதிபதி அலோக் வர்மா உத்தரவிட்டிருந்தார். ஆனால், கோர்ட்டில் ராகுல் ஆஜராகவில்லை. அவர் ஆஜராகவில்லை, மேலும் தனது சட்டக் குழு மூலம், நீதிமன்றத்தில் தான் ஆஜராகாததை நியாயப்படுத்த ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், ராகுல் ஆஜராகாததை பொருட்படுத்தி, நீதிபதி ரூ.200 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.