மும்பை: மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், விக்ரோலியில் உள்ள பார்க்சைடில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த சூழலில், மும்பைக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையின் விக்ரோலியில் உள்ள பார்க்சைடு மலைகளில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மேலும் ஜான்கல்யாண் சொசைட்டியில் உள்ள ஒரு வீட்டின் மீது மண் மற்றும் பாறைகள் விழுந்தன. வீட்டில் வசிக்கும் மிஸ்ரா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காயமடைந்து ராஜாவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஷாலு (19) மற்றும் சுரேஷ் (50) மருத்துவமனையில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆர்த்தி (45) மற்றும் ருதுராஜ் (20) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 5 மணி வரையிலான ஐந்து மணி நேரத்தில் விக்ரோலியில் அதிக மழை பதிவாகியுள்ளது.

இந்த நேரத்தில் மட்டும், விக்ரோலியில் 200 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், தாகூர் நகரில் 213 மி.மீ மழையும், மரோலின் பகுதியில் 216 மி.மீ மழையும் பெய்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் சனிக்கிழமை வரையிலான 24 மணி நேரத்தில், விக்ரோலியில் அதிகபட்சமாக 257.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக மும்பையில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
மேலும், நேற்று இரவு முதல் பெய்த கனமழைக்குப் பிறகு, மும்பையில் பேருந்து போக்குவரத்தில் கடுமையான சிரமம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலத்தில் கனமழை: ஜூன் 20 முதல் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் பருவமழையால் இதுவரை 257 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், மழை தொடர்பான சம்பவங்களில் 133 பேர் உயிரிழந்துள்ளனர், 124 பேர் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் பருவமழை தொடர்பான சம்பவங்களில் 331 பேர் காயமடைந்துள்ள நிலையில், 37 பேர் காணாமல் போயுள்ளனர்.