புது டெல்லி: 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பழைய வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியாக, பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை இரண்டு மடங்கு அதிகரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பழைய வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் வரைவு அறிவிப்பை வெளியிட்டது. அதில், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வணிக கனரக மற்றும் நடுத்தர வாகனங்களின் பதிவைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை முறையே ரூ. 18,000 மற்றும் ரூ. 12,000 ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது.

இருப்பினும், போக்குவரத்து சங்கங்கள் இந்தப் பரிந்துரையை கடுமையாக எதிர்த்தன. இதன் காரணமாக, வணிக வாகனங்களுக்கான கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், டெல்லி மற்றும் NCR-ல் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களின் உரிமையாளர்கள் மீதான நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
தடை விதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய விதிகளின்படி, 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்களுக்கான பதிவு புதுப்பித்தல் கட்டணத்தை மத்திய அரசு இரட்டிப்பாக்கியுள்ளது. அதன்படி, 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இரு சக்கர வாகனங்களின் பதிவைப் புதுப்பிக்க இப்போது ரூ. 2,000 கட்டணம் செலுத்த வேண்டும்.
அதேபோல், 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கார்களின் பதிவைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ. 10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 15 முதல் 20 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கான பதிவு புதுப்பித்தல் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பிஎஸ்-II மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.