புது டெல்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 14 அன்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வீட்டின் ஒரு அறையில் பாதி எரிந்த ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர், தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட குழு முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி விலகுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து, வர்மாவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தலைமை நீதிபதி கடிதம் அனுப்பினார். இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக மத்திய அரசு பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவையில் பதவி நீக்கத் தீர்மானத்தை அறிமுகப்படுத்த குறைந்தபட்சம் 100 எம்.பி.க்களின் கையொப்பங்கள் தேவை. அது தொடர்பாக கையொப்பங்களைப் பெறும் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.