மும்பை மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து பிரபல காமெடியன் குணால் காம்ரா விமர்சித்ததால், அவரது நிகழ்ச்சி நடைபெற்ற ஹோட்டலை சிவசேனா கட்சியினர் சூறையாடினர். மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரான ஏக்நாத் ஷிண்டே தற்போது துணை முதல்வராக இருக்கிறார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிலிருந்து பிளந்து, பாஜகவுடன் இணைந்து ஆட்சியை பிடித்த அவர், தன் மீது தொடர்ந்து வரும் விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறார்.

இந்த நிலையில், பிரபல நகைச்சுவை பேச்சாளர் குணால் காம்ரா தனது நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று விமர்சித்தார். அவரது பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
தொடர்ந்து, மும்பையின் ஹார் பகுதியில் குணால் காம்ராவின் நிகழ்ச்சி நடைபெறும் ஹோட்டலுக்குச் சென்ற சிவசேனா கட்சியினர், அங்கு புகுந்து உடைத்தும், பொருட்களை சேதப்படுத்தியும் சூறையாடினர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா கட்சியினர், குணால் காம்ராவின் புகைப்படத்தை தீவைத்து கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சிவசேனா கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல் கனல், “ஏக்நாத் ஷிண்டேவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க திட்டமிட்ட சதி” எனக் குற்றம் சாட்டி போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, சிவசேனா எம்.எல்.ஏ முராஜி படேல் அளித்த புகாரின் பேரில், குணால் காம்ராவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனாவின் இந்த அத்துமீறல் குறித்து உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.