மும்பையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை குறிவைத்து, 34 வாகனங்களில் மனித வெடிகுண்டுகள் மூலம் 400 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்போவதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்தனர். இந்த செய்தி பரவியதும், மும்பை முழுவதும் போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 21,000க்கும் மேற்பட்ட போலீசார் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மும்பை போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கான வாட்ஸ்அப் எண்ணில் மிரட்டல் செய்தி வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, நொய்டாவில் வசித்து வந்த ஒருவரை கைது செய்தனர். அவர் பீகாரின் பட்லிபுத்ராவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.
அந்த நபர் 51 வயதான அஸ்வினி குமார் என தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நொய்டாவில் வசித்து வந்த அவர், ஜோதிடராக பணிபுரிந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசி மற்றும் சிம் கார்டுகள் தற்போது விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைப்புகள் இந்த மிரட்டலை மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக்கொண்டுள்ளன. நொய்டாவில் கைது செய்யப்பட்ட அஸ்வினி குமாரை மும்பைக்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், மக்களிடம் அமைதியாக இருந்து எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.