புதுடெல்லி: உ.பி.யில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் கும்பமேளா நடத்தப்படுகிறது. இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவாக நடைபெறுகிறது. ஜனவரி 13-ம் தேதி தொடங்கும் மகா கும்பமேளாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக, 2019 கும்பமேளா விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். உ.பி., அரசின் கீழ், மகா கும்பமேளா ஏற்பாடுகளை, பிரதமரே துவக்கி வைப்பது இதுவே முதல் முறை. கலச கும்பத்தை பிரதமர் மோடியிடம் முதல்வர் ஆதித்யநாத் ஒப்படைக்க உள்ளார். பண்டிட் தீப் மிஸ்ரா தலைமையில் 7 மூத்த அர்ச்சகர்கள் பூஜைகளை நடத்தி வருகின்றனர். உலக அமைதிக்காகவும், மகா கும்பமேளா வெற்றிகரமாக நடைபெறவும் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்வார்.

மகா கும்பமேளாவை சர்வதேச அளவில் புனித திருவிழாவாக உயர்த்த மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு மாநில அரசும், மத்திய அரசும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன. கலச கும்ப பூஜையில் அனைத்து அகதாக்களின் தலைவர்கள், முக்கிய துறவிகள் மற்றும் மதரஸாக்கள் பங்கேற்கின்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி உரையாடி வருகிறார்.