கொல்கத்தா: வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. நிமிரிட்டா ரயில் நிலையத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து, மேற்கு வங்க மாநில பா.ஜ.க., மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வக்பு சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள துலியான், ஜாங்கிபூர், ஷம்ஷர்கஞ்ச் உள்ளிட்ட நகரங்களில் வன்முறை வெடித்தது. இதன் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் மாநில அரசால் முடியவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. வன்முறையில் ஈடுபடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் மாநில அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது.
வன்முறையால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இருந்து சிலர் இடம்பெயர்ந்து மால்டா மாவட்டத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. எனவே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்ய வேண்டும். ஜனாதிபதி ஆட்சியின் கீழ் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.