டெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் நடைமேடை அறிவிப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் நடக்கும் கும்பமேளாவுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் செல்வார்கள் என்று தெரிந்திருந்தும் போதிய ரயில்களை இயக்காதது, திடீரென ரயில் நடைமேடையை மாற்றியது என ரயில்வே துறையின் விதிமீறல்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.
ரயில்வே துறையின் இதுபோன்ற முறைகேடுகளால் அப்பாவி பயணிகள் பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 11-ம் தேதி கும்பமேளாவுக்கு செல்வதற்காக பீகார் மாநிலம் மதுபானி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அப்போது நிரம்பி வழிந்த சுதந்திர சேனனி எக்ஸ்பிரஸ் ரயில் மீது ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. இதேபோல், சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த ரயிலை தாக்கினர்.
பீகார் மட்டுமின்றி உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியிலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளன. நெரிசல் காரணமாக முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளுடன் பயணிகள் ஏசி மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட ஏசி பெட்டிகளில் பயணிக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. கும்பமேளாவில் பங்கேற்க இதுவரை இல்லாத வகையில் 50 லட்சம் பேர் ரயிலில் பயணம் செய்தனர். ரயில்வே துறையின் நிர்வாக சீர்கேடுகளே உயிரிழப்புக்கு காரணம் என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் டெல்லி ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் கீழே விழுந்ததால் நெரிசல் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்ததாக வடக்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.