சென்னை: அழகு என்பது பெண்களை மட்டுமே சார்ந்து இருந்த நிலை மாறி தற்போது ஆண்களும் தங்களது அழகை குறித்து கவலைப்பட தொடங்கிவிட்டனர்.
அதற்கு காரணம் இன்றைய நவீன காலத்தில் கூடுதல் அழகை தாண்டி இயற்கையாகவே முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள், அழுக்குகளை இரசாயண அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி சரி செய்ய முயல்கிறோம். ஆனால் அதுவே நம் சருமத்திற்கு கேடு விளைவிக்கிறது.
இதற்கான தீர்வுகளை தேடி பல மருத்துவர்களிடம் சென்று ஆயிர கணக்கில் பணம் செலவிடுகிறார்கள். ஆனால் இதற்கான தீர்வுகள் நம் அன்றாடம் உபயோகிக்கும் உணவு பொருட்களிலேயே இருக்கிறது. தீர்வு தேடுவதற்கு முன்பு அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.
எண்ணெய்ப் பசை சருமம் உடையவர்களுக்கு இயல்பாகவே முகப்பரு பிரச்சனை ஏற்படும். அந்த பருக்களைக் கைகளால் உடைக்கும் போது அதிக அளவு பருக்கள் வந்துவிட வாய்ப்புள்ளது. அதனால் பருக்களைத் தொடாமல் அதை நீக்குவதற்கு முயற்சிப்பதுதான் சிறந்த வழி. வெளியில் சென்று வந்தவுடன் முகத்தை கழுவ வேண்டும். வீட்டிலேயே இருந்தாலும் தினமும் ஐந்து முறை சுத்தமான நீரில் முகத்தை கழுவுங்கள். இது முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்கி பருக்கள் வராமல் தடுக்க உதவும்.
காய்ச்சாத பாலைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்தால் முகத் துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றும். அதற்கு துணியில் பாலை நனைத்து முகத்தைத் துடைத்து நன்கு காய்ந்த பின், நீரில் நனைத்த சுத்தமான காட்டன் கொண்டு துடைக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால், சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.