மக்கள் கொரோனாவை எதிர்கொள்வதில் பழகிவிட்டாலும், அதனால் ஏற்பட்ட தாக்கம் இன்னும் முழுமையாக மறைந்துவிடவில்லை. தற்போது மீண்டும் கொரோனா தொடர்பான மரண செய்திகள் கேட்கும்போது மக்கள் மனதில் ஒரு பீதியை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், ‘நிம்பஸ்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.

இந்த வைரஸ் அதிக தீவிரமற்றதாக இருந்தாலும், சுகாதார நிபுணர்கள் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். தேவையெனில் மாஸ்க் அணிவது நல்லது என்றும் கூறுகின்றனர். நிம்பஸ் என அழைக்கப்படும் இந்த என்.பி.1.8.1 வகை ஒமைக்ரான் குடும்பத்தைச் சேர்ந்தது.
இந்த வைரஸ் தற்போது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் கலிஃபோர்னியா, நியூயார்க், நியூஜெர்சி மற்றும் இல்லினாய்ஸ் உள்ளிட்ட 13 மாகாணங்களில் இது பதிவாகியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு இந்த புதிய வகையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஆனால் இது உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இதுவரை இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட மரணங்கள் மட்டும் பதிவாகியுள்ளன.
இந்த வைரஸின் அறிகுறிகள் சாதாரணமானவை அல்ல. தொண்டையில் கடும் வலி, பிளேடை கிழிக்கும் வலியுடன் தொண்டை மற்றும் மூச்சுப்பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் மே மாதம் வரை இதன் தாக்கம் 10 சதவீத மக்களிடம் பதிவாகியுள்ளது. சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும் தற்போது கொரோனா மீண்டும் மெல்ல பரவிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் இப்போதுவரை நிம்பஸ் வைரஸ் அதிகாரப்பூர்வமாக கண்டறியப்படவில்லை என்றாலும், நோய் பரவலைக் கட்டுப்படுத்த எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பொதுமக்கள் தேவையான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மறுபடியும் ஒரு புதிய வைரஸ் அமோகமாக பரவுவதை தடுப்பதற்கான முதல் படியாக, ஆரோக்கிய வாழ்க்கை முறையும், முன்னெச்சரிக்கையும் முக்கியமாக இருக்கின்றன.