இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள்தொகை, குறிப்பாக வயதானவர்கள் நாள்பட்ட மூட்டு வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் அதிகமாகக் காணப்படும் பிரச்சனை ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ். மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதால் இது உருவாகிறது. முக்கிய அறிகுறிகள் வலி, வீக்கம், இறுக்கம் மற்றும் நடப்பதில் சிக்கல் போன்றவை.

அன்றாட செயல்பாடுகளில் சிரமம் ஏற்படுவதால் வாழ்க்கையின் தரம் குறைகிறது. எடுத்துக்காட்டாக, உட்கார்ந்து எழுவது, தரையில் அமருவது, படிக்கட்டுகள் ஏறுவது போன்ற செயல்கள் வலியுடன் நிகழும்.
இதை சமாளிக்க வாழ்க்கை முறை மாற்றங்கள், உடற்பயிற்சி, எடை குறைப்பு, மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவை உதவிகரமாக உள்ளன. முழங்காலைச் சுற்றிய தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் முக்கியம். ஓடுதல் மற்றும் அதிக தாக்கம் தரும் பயிற்சிகளைத் தவிர்த்து நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
உடல் எடை அதிகமாக இருப்பது மூட்டுகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே உடல் எடையைக் குறைக்க உணவு பழக்கங்களில் மாற்றம் தேவை. சூடான அல்லது குளிர்ந்த ஒத்தடங்களை பயன்படுத்துவதும் வலியை குறைக்கும். இது வீக்கம் மற்றும் இறுக்கத்தையும் குறைக்க உதவும்.
வாய்வழி மருந்துகள் பொதுவாக வலிக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் இதய நோய், சிறுநீரக பிரச்சனை போன்ற பக்கவிளைவுகளுக்கான கவனமும் தேவை. சில நேரங்களில் இன்ட்ரா ஆர்டிகுலர் கார்டிகோ ஸ்டீராய்டு ஊசிகள் போன்ற மேம்பட்ட சிகிச்சை முறைகள் தேவைப்படும்.
விஸ்கோ சப்ளிமெண்டேஷன் முறையில் ஹயாலூரோனிக் அமிலம் மூலம் மூட்டின் மென்மையை மேம்படுத்தலாம். தீவிர நிலையை அடைந்தால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இது முழுமையான நிவாரணம் தரக்கூடியது. ஒட்டுமொத்தமாக நோயாளியின் உடல் நிலை, மூட்டு பாதிப்பு அளவு மற்றும் தேவையைப் பொறுத்து சிகிச்சை முறைத் தேர்வு செய்யப்படுகிறது.
எலும்பு நிபுணர்கள், பிசியோதெரபிஸ்ட், உணவு நிபுணர்கள் மற்றும் மருத்துவக் குழுவின் ஆலோசனையுடன் ஆர்த்ரைட்டிஸ் பிரச்சனையை கட்டுப்படுத்த முடியும். வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்த எளிய முறைகள் இருந்தாலும் அவற்றை தொடர்ச்சியாகப் பின்பற்றுவது முக்கியம்.