கருமேகங்கள் சூழ்ந்து மழை பொழியும் போது இடி முழங்குவது இயற்கையின் ஓர் அங்கமாகவே இருக்கலாம். ஆனால், இடி மற்றும் மின்னல் இருக்கும் நேரங்களில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் பலவாக உள்ளன. பொதுவாக, இடி முழங்கும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறோம். ஆனால் அதே சமயம் வீட்டுக்குள் குளியலறையில் இருப்பதும் ஆபத்தானதாக இருக்கலாம் என்பதை பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

இடி மற்றும் மின்னல் தாக்கம் உள்ள நேரங்களில், நாம் பாதுகாப்பாக இருக்க நினைக்கும் இடங்களில் ஒன்றான குளியலறை கூட ஆபத்துடன் இருக்கலாம். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) வெளியிட்டுள்ள தகவலின்படி, தண்ணீர் மற்றும் பிளம்பிங் அமைப்புகள் மின்னலை எளிதாக கடத்தக்கூடியவை. எனவே, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது குளிப்பது, பாத்திரங்களை கழுவுவது, குழாய்கள் அல்லது சிங்க் போன்றவற்றை தொடுவது கூட ஆபத்தானது.
மின்னல் அதிகபட்சமாக உயர்ந்த கட்டிடங்களைத் தாக்கும் தன்மை கொண்டது. கட்டிடம் தாக்கப்படும்போது, அந்தக் கட்டிடத்தின் வயரிங் மற்றும் பிளம்பிங் வழியாக மின்னல் பயணிக்கும். மெட்டல் பைப்புகளும் அதில் செல்லும் தண்ணீரும் மின்சாரத்தை மிக விரைவாக கடத்தக்கூடியவை. எனவே இந்த நேரங்களில் நீர் தொடர்பான செயல்களில் ஈடுபடுவது நேரடி ஆபத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்க தேசிய வானிலை சேவையின் தரவுகள் படி, ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் மின்னலால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் சிலருக்கு கட்டிடத்துக்குள் இருந்த போதும், பிளம்பிங் வழியாக மின்னல் தாக்கியதனால் தீவிர காயங்கள் ஏற்பட்டுள்ளன. மின்னல் பாதுகாப்பு அமைப்புகள் இருந்தாலும் கூட, மின்னல் தாக்கம் மிகவும் வலுவானதாக இருந்தால் அது ஏற்கனவே உள்ள பாதுகாப்புகளைக் கடக்கக்கூடியதாக இருக்கும்.
பிளாஸ்டிக் பைப்புகள் சில அளவுக்கு பாதுகாப்பு தரலாம் என்றாலும், தண்ணீர் ஒரு மின்கடத்தியாக செயல்படுவதால் ஆபத்துகள் முற்றிலும் நீங்கும் என்று சொல்ல முடியாது. எனவே, இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையின் போது நீர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும்.
நிபுணர்கள் பரிந்துரைக்கும் முக்கியமான முன்னெச்சரிக்கைகளில் சில: இடி முழங்கும் நேரத்தில் குளியலறை, சிங்க் போன்றவற்றை பயன்படுத்தவேண்டாம்; மின்சார சாதனங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்; ஜன்னல்கள், கதவுகள் மற்றும் சுவர்களில் இருந்து விலகி இருங்கள். வாஷிங் மெஷின் மற்றும் டிஷ்வாஷர் போன்ற சாதனங்களைத் தொட வேண்டாம். முக்கியமாக, “30-30 விதியை” பின்பற்ற வேண்டும். அதாவது, மின்னலைக் கண்டதும் 30 வினாடிகள் இடைவெளியில் இடி சத்தம் கேட்கப்பட்டால், குறைந்தது 30 நிமிடங்கள் நடவடிக்கைகள் எதையும் தவிர்த்து காத்திருக்க வேண்டும்.
இடியுடன் கூடிய மழை என்பது இயற்கையின் ஒரு சக்தி. அதை நாம் புரிந்து கொண்டு, அறிவார்ந்த முறையில் எதிர்கொள்வது மிக அவசியம்.