பெங்களூரு: கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத் திருத்த மசோதா கடந்த மாதம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் மத சிறுபான்மையினருக்கு ரூ.2 கோடி வரையிலான ஒப்பந்தப் பணிகளில் 4% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 2பி பிரிவில் பாஜக எம்எல்ஏக்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் ஒப்புதலுக்கு காங்கிரஸ் அரசு அனுப்பியது. அதை பரிசீலித்த ஆளுநர், இந்த சட்டத்திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக நேற்று அனுப்பி வைத்தார்.

முர்முவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் எழுதிய கடிதத்தில், “இந்த திருத்த மசோதா இடஒதுக்கீடு விதிகளுக்கு எதிரானது. பிரிவு 2-ல் பல ஜாதிகள் இருந்தாலும், முஸ்லிம்களுக்கு தனி பிரிவு 2பி உருவாக்கப்பட்டு, இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மத அடிப்படையில் பரிசீலிக்கலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த திருத்த மசோதா அரசியலமைப்புச் சிக்கல்களை உள்ளடக்கியது.
இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சட்டச் சிக்கல்கள் நிறைந்த இந்த மசோதாவை பரிசீலித்து, இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமா என்பதை வழிகாட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.