சென்னை: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதம் அதிகரித்து விட்டது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டில் 2023-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 6968 ஆக அதிகரித்திருப்பதாகவும், 2023-ம் ஆண்டில் மட்டும் 67 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன் அதி.மு.க. ஆட்சியில் 2020-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 4338 ஆக இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ம் ஆண்டில் 6064 ஆகவும், 2022-ம் ஆண்டில் 6580 ஆகவும், 2023-ம் ஆண்டில் 6968 ஆகவும் அதிகரித்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுடன் ஒப்பிடும் போது தி.மு.க. ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை 60.66 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
2023-ம் ஆண்டில் 67 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2022-ம் ஆண்டில் 81 குழந்தைகள், 2021-ம் ஆண்டில் 69 குழந்தைகள் என தி.மு.க. ஆட்சியில் மொத்தம் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். தி.மு.க. ஆட்சியில் மொத்தம் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு வளர்ச்சியடைந்து விட்டது, சிசுக் கொலைகள் ஒழிக்கப்பட்டு விட்டன என ஆட்சியாளர்கள் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தி.மு.க. ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் 28 குழந்தைகள் சிசுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு இந்த புள்ளிவிவரங்களின் மூலம் உறுதியாகியிருக்கிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கான தமிழக மாவட்டங்களில் 53 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில், இதுவரை 20 நீதிமன்றங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அதனால் 60 சதவீதம் போக்சோ வழக்குகள் விசாரிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.