70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் தோல்வியடைந்தார். கடந்த 2020 தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த தேர்தல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
மற்றொரு பெரிய கட்சியான காங்கிரஸ் மூன்றாவது முறையாக அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான பாஜக சட்டமன்ற கட்சி கூட்டம் நேற்று நடைபெற இருந்தது. இந்நிலையில், கூட்டம் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதல்வர் பதவியேற்பு விழாவும், 18-ம் தேதியில் இருந்து, 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி முதல்வர் பதவிக்கு பர்வேஷ் வர்மா, விஜேந்தர் குப்தா உள்ளிட்ட தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்ததன் மூலம் பர்வேஷ் வர்மா வலுவான போட்டியாளராக உருவெடுத்துள்ளார். டெல்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகனான இவர் மேற்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். ஜாட் சமூகத்தின் வலுவான பிரதிநிதியாக அறியப்பட்ட இவர், டெல்லியில் பாஜகவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர். முடிவடைந்த சட்டசபை கூட்டத்தொடரில் பாஜக தலைவராக இருந்த விஜேந்தர் குப்தாவின் பெயரும் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ரோகினி தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். மாநில அரசை வழிநடத்தும் திறன் வாய்ந்த அனுபவமிக்க தலைவராக அவர் காணப்படுகிறார். இவர்கள் தவிர டெல்லி பாஜக முன்னாள் தலைவர்களான சதீஷ் உபாத்யாய், வீரேந்திர சச்தேவா ஆகியோரும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகளும், பிரபல வழக்கறிஞருமான பன்சூரி சுவராஜ், டெல்லி முன்னாள் முதல்வர் மதன்லால் குரானாவின் மகன் ஹரிஷ் குரானா ஆகியோரின் பெயர்களும் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. ம.பி., உ.பி., போன்ற பரந்த சமூக பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய இரண்டு துணை முதல்வர்கள் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.