பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று தொடங்கியது. அதில் காட்டப்பட்டுள்ள பேனரில் தவறான இந்திய வரைபடம் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தி தலைமையில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி கர்நாடகாவின் பெலகாவியில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதன் 100-வது ஆண்டு விழாவையொட்டி, காங்கிரஸ் காரிய கமிட்டியின் சிறப்பு கூட்டம் அதன் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நேற்று நடந்தது.
இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், “பாஜக தொடர்ந்து அரசியல் சாசனத்தை தாக்கி வருகிறது. அரசியல் சட்டத்தை வரையறுத்த அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவதூறாக பேசியுள்ளார்.

இந்த விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். இந்த டிசம்பர் முதல் ஜனவரி 2026 வரை பொது நலன் சார்ந்த பிரச்சனைகளை எழுப்ப உள்ளோம். இது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்றார். இந்த 2 நாள் மாநாட்டுக்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. அதில் காட்டப்பட்டிருந்த இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் இடம் பெறவில்லை.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கூறுகையில், “பெலகாவியில் காங்கிரஸால் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் போஸ்டர்களில் தவறான இந்திய வரைபடம் உள்ளது. அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட் பகுதியும், தற்போது சீன நிர்வாகத்தில் உள்ள அக்சாய் சின் பகுதியும் இடம்பெறவில்லை. அவர்கள் ஜம்மு காஷ்மீரின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்பதை காங்கிரஸ் மறந்து விட்டது.