மேற்குவங்கம்: மத்தியில் பாஜக அரசு 2029 வரை நீடிக்கக் கூடாது என்று முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் I-PAC நிறுவனம் மற்றும் அதன் இயக்நர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நடத்தியபோது, மம்தா பானர்ஜி I-PAC நிறுவனத்திற்கு சென்றார். இதனால் அசாதாரண சூழ்நிலை நிலவியது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக தரவுகளை திருட சோதனை நடத்தப்பட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். அமலாக்கத்துறைக்கு எதிராக மிகப்பெரிய போராட்ட பேரணி தனது தலைமையில் நடத்தினார். இதனால் கொல்கத்தா ஸ்தம்பித்தது. போராட்ட பேரணியின்போது மம்தா பானர்ஜி பேசியதாவது:
என்னை யாராவது அரசியல் ரீதியாக தாக்க முயற்சி செய்தால், நான் அரசியல் ரீதியாக புத்துணர்ச்சி பெறுவேன். தேர்தல் ஆணையத்தின் உதவியுடன், மக்கள் அதிகாரத்தை திருடி மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அவர்கள் அதை பெங்காலில் செய்ய விரும்புகிறார்கள்.
I-PAC நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையின்போது, அவர்கள் என்னுடைய கட்சியின் வியூகங்களை திருட முயன்றனர். அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது எங்களுடைய எம்.பி.க்களை போலீஸ் தாக்கினார்கள். ஆனால், பெங்காலில் பாஜக சிகப்பு கம்பளம் வரவேற்பை பெறுகிறது.
நான் நேற்று செய்ததில் எந்த தவறும் இல்லை. என்னுடைய கட்சி தரவுகளை அவர்கள் திருட முயன்றார்கள். டெல்லியின் மூத்த பாஜக தலைவர்கள் நிலக்கரி சுரங்க ஊழல் பணத்தை பெறுகிறார்கள். தேவைப்பட்டால் மக்கள் முன் ஆதாரங்களை வெளியிடுவேன்.
பெங்கால் சட்டசபை தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். மத்தியில் பாஜக அரசு 2029 வரை தொடரக் கூடாது. யாராவது ஒருவர் என்னை கொல்ல வந்தார் தற்பாதுகாப்பு உரிமை எனக்கு இல்லையா? எம்.பி. கல்யாண் பானர்ஜியை பார்த்து, நம்முடைய அடுத்த இலக்கு, தேர்தல் ஆணைய அலுவலக போராட்டமாக இருக்கட்டும். பெங்கால் வெற்றிக்குப் பிறகு நாம் டெல்லியில் வெற்றி பெற வேண்டும். இந்தயாவை ஆளு பாஜகவை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.