மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சைக்குரிய அரசியல் உரை நிகழ்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து முன்னணி சார்பாக, மதுரையில் கடந்த 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அரசியல், மதம் மற்றும் பொது அமைதிக்கு எதிராகப் பேசக்கூடாது உள்ளிட்ட 52 நிபந்தனைகளை நகர காவல் துறை விதித்திருந்தது. மாநாடு தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளையும் அரசியல் உரைகளைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

இவை அனைத்தையும் மீறி, மாநாட்டில் அரசியல் உரைகள் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இந்த சூழ்நிலையில், மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டணி நிர்வாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன், காவல் ஆணையர் லோகநாதனிடம் புகார் அளித்தார். முருக பக்தர்கள் மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி அரசியல் மற்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தார்.
அதன்படி, அண்ணாநகர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அண்ணாமலை, காடேஸ்வர சுப்பிரமணியம், இந்து முன்னணி நிர்வாகி செல்வகுமார் மற்றும் பலர் மீது மதம் மற்றும் இனத்தின் அடிப்படையில் பேசி பகைமையை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் பேசுதல், மத ரீதியாகப் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.