சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்-தள பக்கத்தில், “வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தலைநகர் சென்னை உட்பட வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளின் அடிப்படையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன்” என்று அவர் கூறினார்.