தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு நெல் அரவை ஆலை அமைக்கப்படும் என தஞ்சாவூர் திமுக சட்டமன்ற வேட்பாளர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்.ராமநாதன்
மாதாக்கோட்டை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, அன்னை தெரசா நகர், மாதாக்கோட்டை, மேலவஸ்தாச்சாவடி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து திலகம் இட்டு வேட்பாளர் சன் ராமநாதனை வரவேற்றனர். வழி நெடுகிலும் ஏராளமான இளைஞர்கள், பெண்கள் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நேற்று முன்தினம் மாலை வல்லம் பேரூர் பகுதியில் வல்லம் பேருந்து நிலையம், பழைய அக்ரஹாரத் தெரு, அகிழாங்கரை மேட்டுத் தெரு, ரெட்டிபாளையம் ,பிள்ளையார் கோவில் தெரு, பெரியார் நகர், அண்ணாசிலை ஆகிய பகுதிகளில் மேளதாளம் முழங்க வீடு வீடாக சென்று சண்.ராமநாதன் வாக்கு கேட்டார்.

வேட்பாளருடன் எம்.பி.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம்,
துணை மேயர் அஞ்சுகம் பூபதி, வல்லம் நகர செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது வேட்பாளர் சண்.ராமநாதன் பேசுகையில், தஞ்சை சட்டமன்றத் தொகுதி திமுக வின் கோட்டை. நான் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். எனவே உதயசூரியன் சின்னத்திற்கு மக்கள் வாக்களிப்பது உறுதியாகிவிட்டது.
அந்த வகையில் மீண்டும் தஞ்சை தொகுதியில் திமுக வெற்றி பெறும்.
என்னை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பும் தஞ்சை தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வல்லம் பகுதி மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் ஆன பிறகு உடனடியாக நிறைவேற்றுவேன்.
கல்லணையில் காவேரி வெண்ணாறு புது.ஆறு இணைக்கும் இடத்தில்
புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு நெல் அரவை ஆலை அமைக்கப்படும்.
நெல் விளையும் பகுதிகளில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நகரும் நெல் உலர்த்திகள் தேவைக்கேற்ப வழங்கப்படும்.
நெல் அதிகம் விளையும் பகுதிகளில் SiloStunge முறையில் தானிய சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள பாரம்பரிய சித்த மருத்துவ முறைகள் குறித்த அனைத்துத் தரவுகளும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலம் ஆவணப்படுத்தப்படும். தஞ்சாவூரில் மேலும் ஒரு ஐடி பார்க் கொண்டுவர தேவையான முயற்சிகளை மேற்கொள்வேன். இல்லத்தரசிகள் தங்களுடைய வீட்டுக்கு தேவையான வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி, கிரைண்டர், மிக்ஸி, மைக்ரோவேவ் அவன், இன்டக்ஷன் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை புதிதாக வாங்க தலா ரூ.8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்பது திமுக தேர்தல் அறிக்கையில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
பெண்களுக்கு இது பேருதவியாக அமையும்.
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை: லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 உயர்த்தி வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை: இனி மாதம் ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை: ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். ரூ.8,000-லிருந்து ரூ.12,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். மீன்பிடி குறைவுகால நிவாரணம்: ரூ.6,000-லிருந்து ரூ.9,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும். எனவே எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்தால் தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தர பாடுபடுவேன் என சண்.ராமநாதன் பேசினார்.
வேட்பாளருடன் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வீட்டுக்கு வீடு நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.