சென்னை: சாட்டை’ துரைமுருகன் யுடியூப் சேனலுக்கும் நா.த.க.,வுக்கும் தொடர்பில்லை என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
” நாம் தமிழர் கட்சிக்கும் ‘சாட்டை ‘ துரைமுருகன் நடத்தும் யுடியூப் சேனலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை,” என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர் துரைமுருகன். அவர் மேடையில் பேசிய பேச்சுகள் காரணமாக சிறை சென்றுள்ளார். இவர் ‘சாட்டை’ என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில், பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துகள் விமர்சனம், அவர்களுக்கு பதிலளிப்பது என பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
கடந்த காலங்களில் இவர் பேசிய பேச்சு சர்ச்சையானது. இதையடுத்து துரைமுருகனை 3 முறை கட்சியில் இருந்து சீமான் நீக்கினார். பிறகு சேர்த்துக் கொண்டார். இதனிடையே, தமிழக பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டது குறித்தும், நித்தியானந்தா குறித்தும் துரைமுருகன் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: துரைமுருகன் நடத்தும் சாட்டை யுடியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதில் வருகிற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். அவற்றுக்கும் நாம் தமிழர் கட்சி எந்த வகையிலும் பொறுப்பாகாது. இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.