பெங்களூரு: கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள எல்லாபுரா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சிவராம் ஹெப்பர், கடந்த சில ஆண்டுகளாக கட்சி உயர்மட்டத்தையும் மாநிலத் தலைவர் விஜயேந்திராவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் காரணமாக, அவர் தனது பழைய கட்சியான காங்கிரசுக்குத் திரும்பப் போவதாக செய்திகள் வெளியாகின. இதேபோல், பெங்களூருவில் உள்ள யஷ்வந்த்பூர் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ எஸ்.டி. சோமசேகரும் பாஜக மாநிலத் தலைமையுடன் மோதலில் ஈடுபட்டார்.

கர்நாடக பாஜக எடியூரப்பாவின் குடும்பச் சொத்தாக மாறிவிட்டதாக அவர் விமர்சித்தார். இதன் காரணமாக, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பாஜக உயர்மட்டத்திடம் மாநிலத் தலைவர் விஜயேந்திரா புகார் அளித்தார். இது குறித்து பாஜகவின் மத்திய ஒழுங்கு நடவடிக்கைக் குழு செயலாளர் ஓம் பதக் கூறுகையில், “கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் சிவராம் ஹெப்பர் மற்றும் எஸ்.டி. சோமசேகர் ஆகியோர் கட்சியின் விதிகளை மீறியதற்காக பாஜகவிலிருந்து 6 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
பாஜகவின் இந்த முடிவை இருவரும் எதிர்த்துள்ளனர். கர்நாடக காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான டி.கே. சிவகுமாரும் இதை எதிர்த்துள்ளார். பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட சிவராம் ஹெப்பர் மற்றும் எஸ்.டி. சோமசேகர் ஆகியோர் விரைவில் காங்கிரசில் சேருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் 2018-ம் ஆண்டு காங்கிரசிலிருந்து பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.