சென்னை: உரிமைகளை மீட்டெடுப்போம்… அம்பேத்கர் வழியில் பயணித்து, தமிழ்தேசிய இன மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் என்று நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நான் யாருக்கும் அடிமை இல்லை; எனக்கும் யாரும் அடிமையில்லை என்று முழங்கிய சமத்துவ நாயகன்! “சாதியக் கொடுமைகளை எதிர்த்து போராடாமல் இருப்பதைவிட செத்து ஒழிவதே மேலானது என்ற புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் இன்றைய காலத்தேவை மட்டுமல்ல; என்றைக்குமான காலத்தேவை!
இன்றளவும் தொடரும் சாதிய ஏற்றத் தாழ்வுகளை நொறுக்குகிற வலிமைமிக்க சம்மட்டியாக அண்ணல் அம்பேத்கர் திகழ்கிறார். பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டு தாழ்தளத்தில் வீழ்ந்துகிடக்குற தமிழ்தேசிய இனப் பிள்ளைகள் உலகங்கெங்கும் மானுட விடுதலைக்குப் போராடிய புரட்சியாளர்களின் வழியிலே எம்மின விடுதலைக்கான அரசியல் புரட்சியை முன்னெடுக்கிறோம்.
சாதி-மதப் பிளவுகள்தான் சமநிலைச் சமூகம் அமையவிடாது ஒவ்வொரு தேசிய இனத்திற்குள்ளும் தன்னினப்பகையை மூட்டி அந்த தேசிய இனங்களைப் பிரித்தாண்டு வீழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த தமிழ்த்தேசிய இனப் பிள்ளைகள் அண்ணல் அம்பேத்கரின் வழியிலே பயணித்து, தமிழ்தேசிய இன மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் என அவரது நினைவுநாளில் உறுதியேற்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.