சண்டிகர்: ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பதவி விலகும் வரை மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்தார்.
இதையடுத்து புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பொறுப்பேற்றார். இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று புதிய அரசு வரும் 15-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயாப் சிங் சைனியை மீண்டும் முதல்வராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவருடன் சிலர் அமைச்சர்களாகவும் பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கின்றனர். வரும் 15ம் தேதி பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய உயர் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரியானாவில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஆளும் பா.ஜ.க., – காங்., இடையே நேரடி போட்டி நிலவியது.
ஆளும் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களில் வெற்றி பெற்றது.
3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.