தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிகவின் 25-வது ஆண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதற்கு தலைமை வகித்த பிரேமலதா கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, அவர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர். அதன் பிறகு கேப்டன் முரசு மாத இதழையும், கேப்டன்.காம் என்ற இணையதளத்தையும் பிரேமலதா தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கட்சியின் துணைச் செயலாளர்கள் எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி மற்றும் விஜய பிரபாகரன். பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது:- தேமுதிக கொடிநாள் வெள்ளி விழாவை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததும் ராஜ்யசபா சீட் உறுதியானது. ராஜ்யசபா தேர்தல் வரும்போது வேட்பாளரை அறிவிப்போம். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து விஜய்யிடம் கேட்க வேண்டும்.
அ.தி.மு.க.வில் செங்கோட்டையனுக்கும் தலைமைக்கும் இடையே நடந்த சம்பவம் அவர்களின் உட்கட்சி பிரச்னை. 2026 சட்டசபை தேர்தலில் தேமுதிக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் புதிதாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு நல்ல திட்டம். ஜெயலலிதா இருந்த போதும் இந்த திட்டம் இருந்தது. திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 10 மாதங்களே உள்ளன. இத்தனை ஆண்டுகளாக மவுனம் காத்துவிட்டு, தேர்தலுக்காக முதல்வர் மருந்தகத் திட்டத்தை அறிவிப்பது. இந்த திட்டம் வெறும் கண்துடைப்பு மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.