தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- அமலாக்கத் துறை சோதனைகள் நடத்துவது இயல்பு. மக்கள் வரிப் பணத்தில் ஊழல் செய்தால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அமலாக்கத் துறையின் ஆய்வுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே, உண்மையான நிலைமை குறித்து மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறையின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த பல்வேறு வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. மாதாந்திர ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதன் மூலம், பெண்களின் வாக்குகளைப் பெற முடியும் என்று திமுக நம்புகிறது.

தமிழகத்தில் இளைஞர்கள் மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டனர். இதன் காரணமாக, கொலைகள் மற்றும் கொள்ளைகள் அதிகரித்துள்ளன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேமுதிக கூட்டணி நிலைப்பாடு ஜனவரி 9, 2026 அன்று கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும். பொள்ளாச்சி பாலியல் வழக்கைப் போலவே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திலும் நியாயமான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.