விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே தொடர்ந்து மோதல் நிலவி வரும் நிலையில், பாமக நிர்வாகக் குழு கூட்டம் கடந்த 5-ம் தேதி தைலாபுரத்தில் நடைபெற்றது. அப்போது, அன்புமணி செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திண்டிவனத்தை அடுத்த ஓமந்தூரில் 8-ம் தேதி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில், அன்புமணியை விமர்சித்து பலர் பேசினர். மேலும், கூட்டணி உட்பட கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்குவது உட்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கிடையில், பாமக தலைவர் அன்புமணியின் பதவிக்காலம் மே 28 அன்று முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, பாமக விதிகளின்படி ராமதாஸ் அடுத்த நாள் தலைவராகப் பொறுப்பேற்றார்.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பாமக முறையான கடிதம் அனுப்பியுள்ளது. செயற்குழு கூட்டம் மற்றும் மாநில செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தின் நகல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த அன்புமணி, பாஜக தலைமையின் ஆதரவு கிடைக்காததால் அமைதியாக சென்னை திரும்பினார்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களுக்குப் பிறகு பொதுக்குழு கூட்டத்தையும் ராமதாஸ் கூட்டத் தயாராகி வருகிறார். இந்தக் கூட்டத்தில், அவர் செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவது மட்டுமல்லாமல், அன்புமணியை கட்சியிலிருந்தே நீக்கவும் அவர் தயங்க மாட்டார் என்று ராமதாஸின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
நிறுவனர் ராமதாஸின் தனிப்பட்ட உதவியாளர் சுவாமிநாதனைத் தொடர்பு கொண்டபோது, ”இந்திய தேர்தல் ஆணையத்திற்கு முறையான கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மற்ற விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என்று கூறினார். கடிதம் எப்போது சமர்ப்பிக்கப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.