சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் இளங்கோவன் என்ற பெரியார் அன்பன் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஆனந்தன், பகுஜன் சமாஜ் கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி.
அக்கட்சிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அசாம் தவிர மற்ற மாநிலங்களில் இந்த சின்னத்தை பிஎஸ்பி மட்டுமே பயன்படுத்த முடியும். இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழ்நாடு வெற்றிக்கழகம் கட்சியின் கொடியில் யானைகள் இருப்பது தேர்தல் சின்ன விதிகளுக்கு எதிரானது.

இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு ஏற்கனவே புகார் அனுப்பப்பட்ட நிலையில், தவெக கட்சி இதுவரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை. ஓட்டுப்பதிவின் போது இது குறித்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக அவர் வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 29-ம் தேதிக்குள் தவேக கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.