சென்னை: கூட்டணி தொடர்பாக கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அது தான் எங்கள் முடிவு என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்.,தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தேர்தல் கமிஷன் யாரால் இயக்கப்படுகிறது என்பது தெரியும். அவர்கள் தன்னிச்சையாக இயங்க வாய்ப்பு கிடையாது. தேர்தல் கமிஷன் திறந்த மனதுடன் வெளிப்படையாக செயல்படவேண்டும் என மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
இல்லை என்றால் தேர்தல் கமிஷன் மீதான நம்பிக்கை போய் விடும். கூட்டணி தொடர்பாக கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அது தான் எங்கள் முடிவு. ஒரு முறையல்ல 400 முறை வந்தாலும் தமிழ்நாட்டில் மோடி, அமித்ஷா ஆகியோரால் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. தமிழக வாக்காளர்கள் புத்திசாலிகள். அவ்வளவு எளிதாக அவர்களை பா.ஜனதாவால் ஏமாற்ற முடியாது.
பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க. திரைமறைவில் ஒளிந்து கொண்டு பா.ஜனதாவின் செயல் திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள். இதற்கு மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள். தொகுதி பங்கீட்டு தொடர்பாக கிரீஷ் சோடங்கர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.