சென்னை: “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர், “உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் இதுவரை 11.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் இதுவரை 11.50 லட்சம் மனுக்கள் வந்திருக்கின்றன.
மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் மட்டும் சுமார் 17 லட்சம் மனுக்கள் வந்திருக்கின்றன. உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் அளித்து தீர்வு காண வேண்டும்” என்றார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ” அரசுத்துறை சேவைகளை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்த்திட, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தின் கீழ், 4 ஆயிரத்துக்கும் அதிகமான முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், அவை குறித்து அரசு உயர் அதிகாரிகள் – மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்புடனான ஆய்வுக்கூட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் நடத்தினோம். ஒவ்வொரு மனுவுக்கும் முக்கியத்துவம் அளித்து, மக்கள் மகிழும் வண்ணம் அவற்றிற்கு தீர்வை ஏற்படுத்த அறிவுறுத்தினோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.