டேராடூன்: உண்மை விரைவில் வெளியே வரும் டேராடூனில் ஆதவ் அர்ஜுனா பேட்டி அளித்துள்ளார்.
கரூரில் கடந்த 27-ந்தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதேவேளை, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளரும், ஆதவ் அர்ஜுனா கடந்த 30-ந்தேதி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டார்.
அந்த பதிவில், தமிழ்நாட்டில் உள்ள இளம் தலைமுறையினர் அரசாங்கத்திற்கு எதிராக புரட்சியை ஏற்படுத்திக் காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அவரது பதிவிற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா அந்த பதிவை நீக்கிவிட்டார்.
ஆனால் அதன் பிறகு கரூர் சம்பவம் தொடர்பாகவோ, அல்லது அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவு குறித்தோ ஆதவ் அர்ஜுனா எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
இதற்கிடையில், இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வரும் ஆதவ் அர்ஜுனா, உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டிக்காக டேராடூன் வந்தார்.
அப்போது விமான நிலையத்தில் ஆதவ் அர்ஜுனாவிடம் அங்கிருந்த செய்தியாளர் கரூர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, “நாங்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். உண்மை விரைவில் வெளியே வரும்” என்று தெரிவித்தார்.