“உங்கள் ஹிந்தியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது மொழி வெறுப்பு அல்ல. தாய்மொழியைப் பாதுகாக்கும் முயற்சி இது” என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழாவில் கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தனது ஆதரவாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. இது தேசத்திற்கு சிறப்பு சேர்க்கும்.
இது தமிழகத்திற்கும் பொருந்தும். இந்தியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் படங்களை பிற மொழிகளில் டப் செய்யக் கூடாது என்று கூறியிருந்தது. ஆனால் தமிழ் படங்கள் நிதி ஆதாயத்திற்காக பல மொழிகளில் டப் செய்யப்படுகின்றன. இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “இந்தியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது மொழி வெறுப்பு அல்ல. நமது தாய்மொழியையும், கலாச்சார அடையாளத்தையும் சுயமரியாதையுடன் பாதுகாக்கும் முயற்சி இது.

இதை யாராவது பவன் கல்யாணிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பவன் கல்யாணின் கருத்துக்கு திமுக எம்பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “தொழில்நுட்ப வளர்ச்சியானது மொழி எல்லைகளைக் கடந்து திரைப்படங்களை ரசிக்க வைத்துள்ளது” என்றும், 2017-ம் ஆண்டு பவன் கல்யாண் கூறிய கருத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அன்றைய கருத்தையும் இன்றைய கருத்தையும் ஒப்பிட்டு பவன் கல்யாணை விமர்சித்தார் கனிமொழி. பவன் கல்யாணின் கருத்துக்கு பலரும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.