தகவல் தொழில்நுட்பத் துறையின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறை துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், தகவல் தொழில்நுட்பத் துறை ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெயபிரகாஷ், சமூக ஊடகத் துறை ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி, இணை ஒருங்கிணைப்பாளர் புளோரியா இம்மாகுலேட் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பத் துறை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 2026 தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், சமூக வலைதளங்களை எப்படி கையாள வேண்டும், கட்சியின் செயல்பாடுகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், சமூக வலைதளங்களில் என்ன மாதிரியான கருத்துக்களை வெளியிட வேண்டும் என ஐடி துறை நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளும், பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, கட்சித் தலைவர் விஜய் வீடியோ மூலம் அங்குள்ள திரையில் தோன்றினார்.

இதை பார்த்த நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர். அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிய பிறகு விஜய் பேசியதாவது:- உங்களை காணொளி மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எங்கள் சமூக ஊடக குழு நாட்டின் மிகப்பெரிய குழு என்று கூறப்படுகிறது. நாம் சொல்வதை விட மற்றவர்கள் இதைப் பார்க்கிறார்கள். இப்போது நீங்கள் ரசிகர்கள் மட்டுமல்ல, தவெகவின் ‘வர்ச்சுவல் வாரியர்ஸ்’.
இப்படித்தான் உங்களை அழைக்கப் போகிறேன். தவெக ஐடி துறை என்றால் ஒழுக்கம், கண்ணியம் என்று எல்லோரும் சொல்லும் வகையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். அதை மனதில் வைத்து வேலை செய்யுங்கள். சீக்கிரம் பார்க்கிறேன். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.