திண்டிவனம்: திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசுடன் ஆடிட்டர் சந்திப்பு நடந்துள்ளது.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி ராமதாசை பற்றி பல பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். மேலும் கடந்த 2 நாட்களாக அன்புமணி ஆதரவாளர்களுக்கு மாற்றாக புதியதாக விழுப்புரம், மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார், திருவள்ளூர், ஈரோடு, போன்ற பல்வேறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களை டாக்டர் ராமதாஸ் புதியதாக நியமித்தார்.
மேலும் மாநில பொருளாளர் திலக பாமாவுக்கு பதிலாக திருப்பூரை சேர்ந்த சையத் மன்சூர் உசேனை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்தார். இந்நிலையில் மாநில பொருளாளர் திலகபாமா மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் போன்ற பல்வேறு மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் தொடர்வார்கள் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சென்னையில் நடந்த பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று ஆடிட்டர் சுப்புரத்தினம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் பாபு ஆகியோர் டாக்டர் ராமதாசை சமாதானம் செய்ய தைலாபுரம் தோட்டத்துக்கு வந்துள்ளனர். 9.40 மணியளவில் சென்ற இவர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக டாக்டர் ராமதாசுடன் ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது இளைஞர் அணி செயலாளர் சுரேஷ் தற்போது டாக்டர் ராமதாஸை சந்திக்க வந்துள்ளார். முகுந்தன் இளைஞர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்த நிலையில் முகுந்தனுக்கு பதிலாக சுரேஷுக்கு தலைவர் பதவி வழங்கப்படலாம் என பா.ம.க. வட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் வந்துள்ளனர். இவர்களுக்கும் டாக்டர் ராமதாஸ் மாவட்ட பொறுப்புகள் வழங்க உள்ளதாகவும் பா.ம.க. வட்டாரத்தில் தெரிய வருகிறது.
பாமக, ராமதாஸ், அறிவிப்பு, முகுந்தன், ஆடிட்டர், சந்திப்பு,