சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவிழிவேந்தன், தனது மனைவி ஜமுனாவை பிரசவத்திற்காக மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்திருந்தார். அங்கு மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால், ஒரு செவிலியரும், ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் பிரசவத்திற்குச் சென்று, ஆண் குழந்தை பிறந்தது. ஜமுனாவுக்கு தொடர்ந்து ரத்தம் கொட்டியதால், ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜமுனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 2019-ம் ஆண்டு நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கை தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பிரசவத்தின்போது உயிரிழந்த ஜமுனாவின் கணவருக்கு 4 வாரங்களில் 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இடையே 108 ஆம்புலன்ஸ்கள் 24 மணி நேரமும் பயன்படுத்த தயாராக வைக்க சுகாதார இணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட வாரியாக தொடர் ஆய்வு மற்றும் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் நன்கு பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்களை நியமித்து கர்ப்பிணி பெண்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க வேண்டும். இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு தமிழக அரசு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.