சென்னை: அதிகரித்து வரும் பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வே இயக்கும் 4 விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் – தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் (16865- 16866) ரயிலில் இரு திசைகளிலும் கூடுதலாக ஒரு முன்பதிவு செய்யப்படாத பெட்டி சேர்க்கப்படும்.
இதேபோல், ஜூலை 1 முதல் சென்னை எழும்பூர் – கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101- 16102) ரயிலில் இரு திசைகளிலும் கூடுதலாக ஒரு முன்பதிவு செய்யப்படாத பெட்டி சேர்க்கப்படும்.

மேலும், ஜூலை 5 முதல் நாகர்கோவில் – தெலுங்கானா மாநில காச்சிகுடா எக்ஸ்பிரஸ் (16353- 16354) ரயிலில் இரு திசைகளிலும் ஒரு கூடுதல் முன்பதிவு செய்யப்படாத பெட்டியும், ஜூலை 2 முதல் சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20635- 20636) ரயிலில் இரு திசைகளிலும் ஒரு கூடுதல் முன்பதிவு செய்யப்படாத பெட்டியும் சேர்க்கப்படும். இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.